Monday 1 April 2013

திருச்சிராப்பள்ளி - பெயர்க் காரணம்


திருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் (திரிஷிரா-மூன்று தலை; புரம்-ஊர்) என்ற சமசுகிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. இந்து சமயப்புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று சிரங்களைக் கொண்ட அரக்கன்,

இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்தததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்குத் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டது என்ற கருத்து நிலவினாலும் அது பலராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

சி. பி. பிரவுன் எனும் தெலுங்கு அறிஞர் சிறிய ஊர் எனப் பொருள் தரும் "சிறுத்த-பள்ளி" என்ற வார்த்தையிலிருந்து திருச்சிராப்பள்ளி என உருவாகியிருக்கும் என்ற கருத்தைத் தருகிறார். 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் திருச்சிராப்பள்ளி, திரு-சிலா- பள்ளி (பொருள்: "புனித-பாறை-ஊர்)" எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால் அதிலிருந்து இப்பெயர் வந்திருக்கலாம் என்ற கருத்து உள்ளது.

வேறு சில அறிஞர்கள் "திரு-சின்ன-பள்ளி" (புனித-சிறிய-ஊர்) என்பதிலிருந்தும் உருவாகியிருக்கலாம் என்ற கருத்தினைக் கொண்டுள்ளனர்.

இது தென்னாட்டுக் கைலை மலை என்றும் புகழப்படுவது. திருச்சி மலைக்கோட்டையில் காணப்படும் குகையில் 'சிரா' என்னும் பெயருடைய சமணத் துறவி தங்கியிருந்து தவமிருந்ததாக அக்குகையில் உள்ள பதினோராம் நூற்றாண்டுக் கல்வெட்டு கூறுகிறது. சிரா

துறவியின் பள்ளி, சிராப்பள்ளி என்றாகி அதுவே இவ்வூருக்குப் பெயராகி உள்ளது என்றும் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment